Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டடத்தில் தமிழகம் 3-வது இடம்

அக்டோபர் 20, 2022 01:28

ராஜ்கோட்:  கிராமப்புறங்களில் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைய, ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAYG) திட்டத்தை ஏப்ரல் 1, 2016 முதல் நடைமுறைப்படுத்துகிறது. மார்ச், 2024க்குள் அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'அனைவருக்கும் வீடு' என்ற இலக்கை அடைய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்தநிலையில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3 - ம் இடம் பிடித்த தமிழகத்திற்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அவர்களிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் விருதினை பெற்றார். 

பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம் ) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகள் அங்கீகரிப்பதற்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், ' பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள் '' என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்பு பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

மேற்கண்ட விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3வது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3 வது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5 வது இடமும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.

இம்மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களுடன் , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் திரு.ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா இ.ஆ.ப., வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்